Thursday, March 24, 2011

மக்களை ஏமாற்றும் அரசாங்கம் !

இந்த ஆண்டு மத்திய பட்ஜெட்டில் புதிதாக ஒரு
சேவை வரி விதிக்கப்பட்டிருக்கிறது.

உடல் நலம் சரி இல்லாதவர்கள் மருத்துவ
மனையில் சிகிச்சை பெற்றால்,அந்த மருத்துவ
மனை 25 படுக்கைகளுக்கு மேல் கொண்டதாகவோ,
குளிர் சாதன வசதி உள்ளதாகவோ இருந்தால்,
நோயாளி தான் பெறும் மருத்துவ சேவைக்காக,
மொத்த பில்லில் 5% சேவை வரியாக மத்திய
அரசுக்கு செலுத்த வேண்டும்.

உடல் நலம் கெட்டு, நொந்து போய் மருத்துவ
சிகிச்சை பெற மருத்துவமனைக்கு போகும்
நோயாளியிடம் கூட காசைப் பிடுங்கும்
இந்த அரசு, பெரிய பெரிய முதலாளிகளிடம்,
வியாபாரிகளிடம் – நடந்து கொள்வது எப்படி
என்பது யாராவது கண்டு பிடித்துச் சொன்னால்
தான் நமக்குத் தெரிகிறது !

பொது மக்களுக்கு விவரம் தெரிந்து விடக்கூடாதே
என்று தான் சில விஷயங்களை பூடகமாக
வெளியிடுகிறார்கள். பட்ஜெட் உரையை
நிதி அமைச்சர் படிக்கும்போது, அவர் முழு
விவரங்களையும் படிப்பதில்லை. முக்கியம்
என்று அவர் கருதுவதை மட்டும் சுருக்கமாகப்
படிக்கிறார். அது இன்னும் சுருக்கமாக்கப்பட்டு
தலைப்புச் செய்திகளாக வருகிறது.

நாமோ தலைப்புச் செய்திகளை மட்டும்
பார்த்து விட்டு புதிய வரி இல்லை என்று
சந்தோஷமாகப் போய் விடுவோம்.

ஆனால் முழு பட்ஜெட்டையும் பத்தி பத்தியாக
ஆராய்ந்தால் தான், அதையும் முந்தைய வருட
வரவு செலவு விவரங்களுடன் ஒப்பிட்டுப் பார்த்தால்
தான் நடந்திருக்கும் தில்லுமுல்லுகள்
தெரிய வருகின்றன.

சாதாரணமாக நம்மைப் போன்ற பொதுமக்களுக்கு
புரியாத வகையிலேயே அந்த விவரங்கள்
அமைக்கப்பட்டிருக்கின்றன.விவரம் தெரிந்தவர்கள்
நிதானமாக உள்ளே புகுந்து ஆராய்ந்தால்
பல தகிடுதித்தங்கள் தெரிய வருகின்றன.

பி.சாய்நாத் என்கிற பொருளாதார நிபுணர் ஒருவர்
நடப்பு ஆண்டுக்கான பட்ஜெட்டை அலசி ஆராய்ந்து
கொடுத்திருக்கும் விவரங்களை பார்த்தால்
பற்றிக் கொண்டு வருகிறது. அரசாங்கம் எப்படி
எல்லாம் நம்மை ஏமாற்றுகிறது என்பது
புரிய வருகிறது.

3 வருடங்களுக்கு முன்னர் அமெரிக்காவில்
ஏற்பட்ட கடும் பொருளாதாரச் சரிவு காரணமாக
உலகம் பூராவும் ஏற்பட்ட நெருக்கடியில் -
பல நாடுகளும் சிக்கித் தவித்தன.

பெரும் அளவில் வர்த்தக நிறுவனங்களும்,
தொழிற்சாலைகளும் மூடப்பட்டன.
தொழிலாளர்கள் வேலை இழந்தனர்.

இந்தியாவிலும் அத்தகைய சூழ்நிலையின்
பாதிப்பால்,
தொழிற்சாலைகளில் உற்பத்திக் குறைவும்,
அதன் காரணமாக வேலையின்மையும்
ஏற்பட்டு விடக்கூடாதே என்று மத்திய அரசு
எக்சைஸ் வரியிலும்,
சுங்க வரியிலும் பல சலுகைகளை
தற்காலிகமாக அனுமதித்தது.

இந்த சலுகைகள் அளிக்கப்பட்டதன்
காரணமாகச் சொல்லப்பட்டவை -
தொழிற்சாலைகள்
நஷ்டம் அடையக்கூடாது,
உற்பத்தி குறையக்கூடாது,
தொழிலாளர்கள் வேலை இழக்கக் கூடாது.
தொழிற்சாலைகளுக்கு ஏற்படக்கூடிய நஷ்டத்தை
ஈடுசெய்யும் விதமாக எக்சைஸ் மற்றும்
சுங்க வரிகளில் பல சலுகைகள் தற்காலிகமாக
அளிக்கப்பட்டன.

2 ஆண்டுகளுக்கு பின்னர் பார்த்தால்,
நஷ்டம் அடையும் என்று எதிர்பார்க்கப்பட்ட
மேற்படி கம்பெனிகள் எல்லாம்
நல்ல லாபத்திலேயே ஓடி இருக்கின்றன.
அவைகளுக்கு சலுகைகளே
தேவைப்பட்டிருக்கவில்லை.
கொடுக்கப்பட்ட சலுகைகள் எல்லாம் -
அதிக பட்ச லாபமாக முதலாளிகளிடம்
சென்றடைந்துள்ளன.

அரசாங்கம் இதுபற்றி தெரிந்துகொண்டே
இந்த சலுகைகளை வேறு நோக்கில்
கொடுத்ததா அல்லது இந்த சலுகைகள்
தேவைப்பட்டிருக்கவில்லை என்பது பின்னால்
தான் தெரிய வந்ததா என்பது தெரியவில்லை.

ஏற்கெனவே கொடுத்த சலுகைகளே
தேவையற்றவை
என்கிற நிலையில் – அந்த சலுகைகள்
உடனடியாக வாபஸ் பெறப்பட்டிருக்க வேண்டும்.

ஆனால் 3 ஆண்டுகளாகவும்,
இந்த ஆண்டு பட்ஜெட்டிலும் அந்த சலுகைகள்
தொடர்கின்றன.
எங்கே அவை வெளியே தெரிந்து
விடப்போகின்றனவே
என்கிற முன் ஜாக்கிரதையில் -எக்சைஸ் மற்றும்
சுங்க வரி விதிப்பில் மாறுதல் ஏதும் இல்லை
என்று சொல்லிவிட்டு அமைச்சர்
அடுத்த தலைப்பிற்கு சென்று விடுகிறார்.

தேவை இல்லாமலே தற்காலிகமாக
கம்பெனிகளுக்கு கொடுக்கப்பட்ட
சலுகைகள் தொடர்கின்றன என்று – அமைச்சர்
வெளிப்படையாக சொல்லவில்லை.
ஆனால் மாறுதல் இல்லை என்கிறபடியால்
அந்த சலுகைகள் இந்த ஆண்டும்
தொடர்கின்றன.

விவரம் தெரியாமலா நிதி அமைச்சர்
இதைத் தொடர்கிறார் ?

ஆளும் கட்சிக்கு எந்த எந்த கம்பெனிகளிடமிருந்து
நன்கொடைகள் வருகின்றன என்று பார்த்தால்
இந்த கேள்விக்கு விடை கிடைத்து விடும்.

இந்த சலுகைகள் காரணமாக – அரசாங்கம் கடந்த
3 ஆண்டுகளில் இழந்த வருமானத்தைப் பாருங்கள் -

2008-09 2009-10 2010-11
எக்சைஸ் 1,28,293 1,69,121 1,98,291
வரி (கோடிகளில் )
சுங்க வரி 2,25,752 1,95,288 1,74,418

(ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட்டுடன் வெளிவரும் -
தள்ளுபடி செய்யப்பட்ட வருமானங்கள் என்கிற
தலைப்பில் உள்ள அறிக்கைகளிலிருந்து மேற்படி
விவரங்கள் திரட்டப்பட்டு இருக்கிறது )

சாதாரண பொதுமக்களை கசக்கிப் பிழிந்து
பணம் பிடுங்கும் இந்த அரசு எவ்வளவு சாமர்த்தியமாக
பெரும் முதலாளிகளுக்கு சலுகைகளை அள்ளி வீசுகிறது.
அப்படி கொடுக்கும் சலுகைகளும் வெளியில்
தெரியாமல் எவ்வளவு சாமர்த்தியமாகப் பார்த்துக்
கொள்கிறது – பார்த்தீர்களா !

இவர்களை எல்லாம் என்ன செய்தால் தகும் ?

No comments:

Post a Comment