Monday, April 4, 2011

மின்சாரம் கொடுத்தவன் இறைவன் ஆவான் – ஒரு வெற்றிக் கதை

Ratnesh Yadav, Image courtesy : Microsoft
இது வரைக் காலமும் நமது பழமொழி எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான் என இருந்தது. மின்சாரம் கொடுத்தவன் இறைவன் ஆவான் என இனி அது மாற்றம் பெறப் போகின்றது. ரட்னேஸ் யாதவ் 35 வயது இளைஞர் தில்லி பல்கலைக்கழகத்தில் புவியியல் படித்துவிட்டு தனது மாநிலமான விகாருக்கு எதாவது செய்ய வேண்டும் என்ற லட்சியத்தோடு 2003-யில் விகார் திரும்பினார். ஆரம்பக் காலங்களில் ஆமணக்கு, காற்றாடி, சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிக்கும் முயற்ச்சியில் ஈடுபட்டார் ஆனால் அவை பெரிதாக வெற்றியளிக்கவில்லை. அதனால் 2007-ம் ஆண்டு அமெரிக்காவில் இருந்து திரும்பிய ஒரு பொறியாளத் தோழரின் உதவியோடு சாணத்தின் மூலம் எரிவாயு உற்பத்தி செய்யும் மையம் ஒன்றினை மேற்கு சம்பாரன் மாவட்டத்தில் உள்ள தங்கா கிராமத்தில் நிறுவினார். தேசிய கிராமப்புற மின்சார திட்டம் மாவட்டத்தின் பல இடங்களுக்கு மின்சாரம் அளித்து வந்தாலும், அவை பல்வேறு காரணங்களுக்காக மாவட்டத்தின் பெரும்பாலான கிராமங்களுக்குப் பயனளிக்கவில்லை. குறிப்பாக 72 கிராமங்கள் மின்சார வசதி இல்லாமலயே இருந்து வந்தன. அதனால் ரட்ணேஷ் யாதவ் 15 லட்சம் இந்திய ரூபாய் முதலீட்டில் அங்கு இயற்கை எரிவாயு நிலையம் ஒன்றினை நிறுவி, அந்நிறுவனத்துக்கு ஹஸ்க் பவர் சிஸ்டம் எனப் பெயரிட்டார். அந்நிறுவனம் மாதம் ஒன்றுக்கு 30 வாட் மின்சாரத்துக்கு வெறும் 100 ரூபாய்களைப் பெற்றுக் கொண்டு கிராமங்களின் வீடுகளுக்கு மின்சாரம் அளித்து வருகின்றது.

சராசரியாக அந்தக் கிராமங்களின் வீடு ஒவ்வொன்றும் இதற்கு முன்னர் மாதம் ஒன்றுக்கு 150 முதல் 200 ரூபாய் வரை விளக்குகளுக்கும், அதற்குப் பயன்படுத்தும் மண் எண்ணெய்க்கும் செலவிட்டு வந்தன. அந்த விளக்குகள் நாள் ஒன்றுக்கு இரண்டு மணிநேரங்கள் மாத்திரமே எரியக் கூடியவை. ஆனால் தற்சமயம் இந்த நிறுவனம் மாதம் ஒன்றுக்கு 15 வாட் மின்சாரத்துக்கு அதிகப் பட்சம் 80 ரூபாய்களை பெற்றுக் கொள்கின்றனர். அதுமட்டுமின்றி முன்பெல்லாம் கிராம வாசிகள் தமது செல்பேசிகளை சார்ஜ் செய்ய பக்கத்து நகரங்களுக்கு சென்று ஐந்து ரூபாய் வரை செலவிட்டு சார்ஜ் செய்து வந்துள்ளார்கள். ஆனால் தற்சமயம் இந்நிறுவனம் செல்பேசிகளை இலவசமாக மின்னூட்டிக் கொள்ள வசதி செய்துக் கொடுத்துள்ளது.

அதே போல இந்த மின்சாரம் நிறுவனத்தைக் கவனித்துக் கொள்ள உள்ளூர் மக்களில் சிலரை வேலைக்கு அமர்த்தி அவர்களுக்கு பயிற்சியும் அளித்துள்ளனர். தற்சமயம் இந்நிறுவனம் 60 ப்ளாண்ட்களை நடத்தி வருகின்றது இதனால் 270 கிராமங்களில் சுமார் இரண்டு லட்சம் பேர் வரை மின்சார வசதி பெற்றுள்ளனர். அதே போல இந்த இயற்கை எரிவாயு நிலையங்களின் கட்டுமானம், அதற்குத் தேவையான பொருட்கள் அனைத்தையும் உள்ளூரில் இருந்தே எடுத்துக் கொள்கின்றனர். சுற்றுப்புறச் சூழலுக்கு பெரிதும் தீங்கில்லாமல் இவர்கள் இந்நிறுவனத்தை நடத்தி வருகின்றாரள். குறிப்பாக உள்ளூர்களில் பட்டைத் தீட்டப்படும் அரிசிகளில் மிஞ்சும் உமிகளை விலைக்கு வாங்கிக் கொள்கின்றார்கள். அவற்றைப் பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்கின்றனர். இதனால் வீணாகப் போகும் உமிகளை விற்பதாலும் கிராம வாசிகள் பயன்பெறுகிறார்கள். அத்தோடு நிற்காமல் மின்சாரத் தயாரிப்பில் ஈடுபட்ட பின்னர் மிஞ்சும் உப பொருட்களில் இருந்து ஊதுபத்தி செய்யும் தொழிலும் நடக்கின்றன. இந்த தொழிலில் கிராம வாசிகளே ஈடுபடுவதால் அவர்கள் மேலும் நன்மை அடைகிறார்கள்.

ஆனால் கிராம வாசிகள் மின்சாரம் அதிகம் செலவாகும் குண்டுப் பல்புகளைப் பயன்படுத்த இந்நிறுவனம் தடை செய்துள்ளது. இருந்தாலும் மின்சாரம் எட்டாக்கனியாக இருந்த இக்கிராமங்கள் ஒளிப் பெற்று உள்ளன. குழந்தைகள் இரவில் படிக்க முடிகின்றது. தொலைக்காட்சிகள் வந்துவிட்டன. கடைகள் முன்னை விட அதிக நேரம் திறந்து வியாபாரத்தில் ஈடுபடுகின்றனர். இரவில் நடந்து செல்லும் மக்கள் பாம்புகளுக்கு அஞ்சி வாழ்ந்தார்கள். தற்சமயம் அந்த அச்சமும் நீங்கியுள்ளது.

இவர்களின் வெற்றியைத் தொடர்ந்து ஓனர்ச்சி என்னும் நிறுவனமும் கிராமப் புறங்களுக்கு வளங்குன்றா வளங்கள் மூலம் மின்சாரம் தயாரிக்கும் நடவடிக்கையில் ஈடுப்படத் தொடங்கியுள்ளது. அதே போல இந்நிறுவங்கள் தொடங்குவதற்கும் அவற்றின் வெற்றிக்கும் 2003 ம் ஆண்டு நடுவண் அரசு மின்சார உற்பத்திகளை பரவலாக்கக் கொண்டு வந்த திட்டங்களும், அனுமதி வழங்கலுமே பெரும் உதவியாக அமைந்தது எனலாம். இதனால் தான் சிறிய நிறுவனங்கள் மின்சார உற்பத்தியில் ஈடுபடவும் செயல்படவும் முடிகின்றது.

ரட்ணேஷ் யாதவின் இந்த முயற்சியும் உழைப்பும் நம்மை வியக்க வைக்கின்றன. தமிழ்நாட்டில் இப்படியான விடிவெள்ளிகள் மின்னும் காலம் எப்போது வரும் ????